Tuesday, 22 May 2012

மேற்கிலிருந்து கற்றதும்/பெற்றதும்

சிகாகோ நகரிலிருந்து Fort Lauderdale வரும் விமானத்தில் அவரை சந்தித்தேன். அவர் பெயர் Dennis Tino. அவர் மனைவி பெயர் Norma. பொதுவாக ஐரோப்பா, அமெரிக்கா இரண்டு இடங்களிலுமே நான் பார்த்த விஷயம், விமானத்திலோ, ரயிலிலோ அருகில் இருப்பவரிடம் ஒரு ஹலோ சொல்லி பேசி விடுவார்கள். இவரும் விதிவிலக்கல்ல. என்னிடம் ஹலோ சொல்லி பேச ஆரம்பித்தார். அவர் கையில் "Dearborn Stories" என்றொரு புத்தகம் இருந்தது. Dearborn, மிச்சிகன் நகரை சேர்ந்தது. Henry Ford பிறந்த ஊர். அங்கு தான் Ford தலைமையகம் உள்ளது.


என்னிடம் Dearborn பற்றி கூறி அந்த புத்தகத்தை படி என்றார். Dearborn பகுதியில் பல காலமாக வாழ்ந்து வரும் குடும்பங்கள் தங்கள் ஊரின் நினைவுகளை அந்த புத்தகத்தில் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். தன் தாத்தா முதலாம் ஹென்றி போர்டுடன் வேலை செய்தது, ஹென்றி போர்ட் அந்த ஊர் மக்களுக்காக செய்த நன்மைகள், மூன்று தலைமுறையாக அதே ஊரில் வாழ்பவர்கள், இல்லத்தின் ஒரு குறிப்பிட்ட அறையில் 1900 ஆம் ஆண்டு பிறந்து 1973 ஆம் ஆண்டு உயிர் நீத்த தன் பாட்டனாரை பற்றிய பேரனின் கதை, இரண்டாம் உலகப் போரின் போது Dearborn நகர் எப்படி இருந்தது என்று ஒரு மணி நேரத்தில் நிறைய கதைகள் படித்திருந்தேன்.


டென்னிஸ் என்னை தோளில் தொட்டு, புத்தகம் எப்படி என்றார்? நான் சிரித்தபடி, நீங்கள் இந்த புத்தகத்தை படித்தாயிற்றா என்றேன்? இல்லை என்றார். என் நெஞ்சை கனக்கச் செய்த சில பக்கங்களை காட்டி, படியுங்கள் என்றேன். அவ்வப்போது தன் மனைவியை அருகில் அழைத்து காட்டி முத்தமிட்டபடி படித்து பழைய நினைவுகளில் இருவரும் மூழ்கினர். கொஞ்ச நேரம் கண் மூடியபடி இருந்தேன். இதைப்போல மாம்பலம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் வாசிகள் புத்தகம் கொண்டு வந்தால் என்னவென்று தோன்றியது. பாலகுமாரனின் அப்பம், வடை, தயிர்சாதம் இந்த வகை புத்தகம். மூன்று தலைமுறைகளை பற்றிய கதை. ஒரே வித்தியாசம் பாலகுமாரன் புத்தகம் கற்பனை. Dearborn Stories உண்மை. இந்த தலைமுறை கொஞ்சம் பிரயாசை செய்து தேடினால் நமக்கும் நிறைய Dearborn கிடைக்கும்.


என் தந்தை தஞ்சை பற்றிய தன் பால்ய நாட்களை அடிக்கடி சொல்லுவார். ஒரு வீச கொத்தவரங்காய் ஓரணா. மூணு கிலோ நல்லெண்ணெய் ரெண்டனா. எண்பளது(தஞ்சை பகுதியில் அந்த நாளில் வாழ்ந்தவர்கள் எண்பதை எண்பளது என்பார்கள்) ருபாய் சம்பளத்துல பத்து பேர் இருக்கற குடும்பம் ஒரு மாசம் முழுக்க சாப்பிடலாம். எல்லா கறிகாயும் கொல்லைப்புறமே பயிர் பண்ணுவோம். முருங்கைக்காய், புடலங்காய், வெண்டை எல்லாம் கொல்லைல தான். கண்டத்திப்பிலி ரசம், விளாம்பழ ஓடு ரசம், சாம்பார், வெத்தக்கொழம்பு, பொரியல், கூட்டுன்னு பத்து வகையா டெய்லி சாப்பாடு. பெரிய கோவில் உற்சவம், முத்துப் பல்லாக்கு, திருவையாறு சப்தஸ்தானம், கருத்த்தட்டாங்குடி சப்தஸ்தானம், முஸ்லிம்கள் கொண்டாடற சந்தன கூடு அப்படின்னு வருஷம் பூரா விழா தான்.


முத்துப் பல்லாகுக்கு M.P.N.சேதுராமன்-பொன்னுசாமி நாதஸ்வரம். ராத்திரி பூரா நாலு வீதியும் சுத்தி வந்து வாசிப்பா. ஒடம்புல சட்டை போட மாட்டான். ஹோட்டல்ல காபி ஆத்தறவன் ராத்திரி கச்சேரில துளி கூட சுருதி பிசகாம தாளம் போடுவான். கார்த்திகை வந்தா வடவாறு, குடமுருட்டி, காவேரி எல்லாத்துலயும் தண்ணி கரைபுரண்டு ஓடும். அதுல விளையாடுவோம். யார் வீட்டுக்கு போனாலும் சாப்பாடு உண்டு. பள்ளிகூடத்துல வாத்தியார் சாயந்தரம் சாப்ட்டு முடிச்ச பாத்திரத்தை எங்க கிட்ட சொல்லி வீட்ல கொடுக்க சொல்லிடு வேற எங்கயாவது போய்டுவார். அவர் வீட்டுக்கு போனா மாமி ரெண்டு அடை வாத்து போடுவா. ஒரு அடை ஒன்றரை இன்ச் இருக்கும். ரெண்டு சாப்டா ராத்திரி சாப்பிட முடியாது. தொட்டுக்க காலம்பறது ரச வண்டல் இருக்கும். அந்த காலமே தனி என்பார்.


நிச்சயம் இந்த கதைகள் சென்னையிலும் உண்டு. ஏன் நம் பிள்ளை பிராயத்து கதைகளே எத்தனை உண்டு? Dearborn Stories போன்ற மேற்கின் நல்ல விஷயங்கள் நம் கண்ணுக்கு தெரிவதே இல்லை.டென்னிஸ் நார்மாவை தழுவிக்கொண்டு தன் பழைய நினைவுகளில் மூழ்கிய அந்த நிமிடங்களை எண்ணி சிலிர்க்கின்றேன். நம்மூராக இருந்தால் மனைவி, "போறும் போறும், உங்களை கட்டிண்டு நான் பட்ட பாடு" என்று சொல்லியிருக்க கூடும். நம் திருமண குறுந்தகடை கூட நாம் FF செய்யாமல் ஒரு முறை பார்த்திருப்போமா? ஒரு ஞாயிறு நம் குழந்தைகளுடன் அதை அமர்ந்து பார்க்க வேண்டும் என்று நினைக்கிறோமா? அதை பார்க்கும் போது மனைவியின் முகத்தில் ஏற்படும் நாணத்தை கண்டு களிப்புறும் தருணங்களுக்கு என்ன விலை கொடுக்கக் கூடும்?

Monday, 21 May 2012

P.A.சங்மா

ஜெயலலிதா தனது வாழ்நாளில் செய்த நல்ல காரியங்களில் ஒன்று சங்மா பெயரை ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரை செய்தது. அவர் ஜனாதிபதி ஆகிறாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் ஆனால் சங்மா இந்த பதவிக்கு ஏன் தகுதியானவர் என்று இப்போது பார்ப்போம்.


1947 ஆம் ஆண்டு மேகாலயாவில் பிறந்தார் சங்மா. B.A(Hons), Masters Degree in International Relations, LLB படித்தவர். 1973 ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். மேகாலயாவின் முதல்வர் உட்பட பல்வேறு பதவிகள் வகித்தவர். மத்திய மந்திரியாக பல துறைகளுக்கு தலைமை வகித்தவர்.


1991-93 - Union Minister of State, Coal (Independent Charge)
1993-95 - Union Minister of State, Labour (Independent Charge)
February–September 1995 - Union Minister of State, Labour
1995-96 - Union Cabinet Minister of Information and Broadcasting


தொழிலாளர் துறை அமைச்சராக பல மாற்றங்கள் கொண்டு வந்தவர். அவர் புண்ணியத்தில் தான் லிப்டன் டீ நிறுவனத்தில் இருந்து 1995ல் விருப்ப ஓய்வு வாங்கிய என் தந்தை இன்னும் மாதம் ஐநூறு ரூபாயோ என்னவோ பென்ஷன் வாங்கிக் கொண்டிருக்கிறார். முக்கியமாக கறைபடாத கை. இந்தியாவின் உள்நாட்டு/வெளிநாட்டு பிரச்சனைகளை நன்கு உணர்ந்தவர். யார் யாரோ ஐந்து வருடம் இருந்தாயிற்று. இந்த நல்ல மனிதருக்கு தாராளமாக ஜனாதிபதி பதவி தரலாம். அந்த பதவிக்கு நிச்சயம் இவரால் கௌரவம் கிடைக்கும்.


டெயில்பீஸ்: சங்மாவின் மகள் அகதா சங்மா தற்போது உள்ள மத்திய காங்கிரஸ் அமைச்சரவையின் கிராம வளர்ச்சி துறை மந்திரி(Minister of State for Rural Development). இவர் தான் இந்த அமைச்சரவையிலேயே இளையவர்.

Monday, 14 May 2012

என்ன எழுதுவது?

ஆங்கிலத்தில் "Writer's Block" என்று சொல்லுவார்கள். நாங்கள் இரண்டு பேர் இருப்பதால் Apostrophe இல்லாமல் நிஜமாகவே "Writers Block" என்று தான் சொல்ல வேண்டும். அது சரி, இதையெல்லாம் நிஜ Writer சொன்னால் பரவாயில்லை, உனக்கென்ன என்கிறீர்களா? உண்மை தான். மிகுந்த வேலைப் பளு என்றாலும் எழுத முடியாத காரணம் அது ஒன்று மட்டும் இல்லை. சொந்த பிரச்சனைகளும் முக்கிய காரணம். தற்போது இருபது நாட்கள் அமெரிக்க பயணம் என்பதால் கொஞ்சம் நேரம் கிடைத்தது. கிடைத்த நேரத்தில் கொஞ்சம் எழுதலாம் என்று உட்கார்ந்து விட்டேன். நிறைய விஷயங்கள் குறித்து எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், எழுத நினைத்திருந்த விஷயங்கள் இப்போது மறந்துவிட்டன. சரி, நினைவில் இருப்பதை பதிவிடுகிறேன்.


மாசுக் கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பை சார்ந்த விஞ்ஞானி ஒருவர் கடந்த மாதம் சென்னையை அடுத்த எருக்கஞ்சேரியில் குப்பை எரிப்பதால் புற்றுநோய் உண்டாக்கும் கிருமிகள் அந்த பகுதியையும் அதை சுற்றியுள்ள இடங்களையும் பாதிக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக கூறியிருந்தார். சொன்னவர் பெயர் நினைவில் இல்லை என்றாலும் சொன்ன விஷயம் மறக்கக் கூடியது அல்ல. ஒரு போபால் மட்டும் தான் வெளியே தெரிந்துள்ளது. அதைப்போல பல உண்டு இந்தியாவில். அரசின் கவனத்திற்கு இதை யாராவது(இந்த வார்த்தையை அழுத்தம் கொடுத்து படிக்கவும்) எடுத்துச் செல்வார்கள் என்று நம்புவோம். அல்லது, Erin Brokovich படம் போல எதாவது நடந்தால் உண்டு.


மற்றபடி, சென்ற பதிவிற்கும் இதற்குமிடையே பதிவிடும் அளவிற்கு முக்கிய நடப்புகள் என்ன என்று யோசிக்கிறேன். சட்டசபையில் நெரிக்கப்படும் ஜனநாயகத்தின் குரல் என்ற தலைப்பில் நடத்தப்படும் தி.மு.க கூட்டங்கள், அழகிரி-ஸ்டாலின் மோதல், மதுரை ஆதீனம்-நித்தியானந்தா காமெடி, ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்தவுடன் தான் சென்று தங்க வேண்டிய இடத்தை அபகரித்ததாக பிரதீபா பதில் மீது கூறப்பட்ட புகார், எடியூரப்பா போன்றவை சராசரி விஷயங்களே. அவற்றை சீரியசாக எடுத்துக்கொள்ள தேவையில்லை.


அமீர் கானின் "சத்யமேவ் ஜெயதே" என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சி இந்தியா முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது. திரைப்பட தொழிலில் உள்ள அவர் நண்பர்கள் உட்பட பலரும் அவர் நிகழ்ச்சியை ரசித்து பாராட்டியுள்ளனர். முதல் வாரம் "பெண் சிசுக்களை கருவில் அழிப்பதை" பற்றியது. ராஜஸ்தானில் மருத்துவர் பட்டம் பெறாத பலர் பெண்களுக்கு இந்த கருக்கலைப்பை செய்கின்றனர். இந்த நிகழ்ச்சியை என்னால் பார்க்க முடியவில்லை என்றாலும் இணையத்தில் இந்நிகழ்ச்சி குறித்த பல தகவல்களை படிக்க முடிந்தது. நடிகை லக்ஷ்மி நடத்திய "இது கதையல்ல நிஜம்" போன்ற நிகழ்ச்சி. அமீர் கானின் சமூக உணர்வு பாராட்டத்தக்கது. முதலில் Coca Cola விளம்பரங்களில் நடித்த அவர் தற்போது அதன் இந்திய வடிவத்தின் தரம் சரியில்லை என்று அந்த நிறுவனத்தின் விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். அவரை போல பல பெரிய நட்சத்திரங்கள் இது போன்ற சமூக சீர்திருத்த முயற்சிகளில் ஈடுபட வேண்டும். பணம் என்பது இரண்டாம் பட்சமே என்று அமீர் கான் சொல்லாமல் சொல்லி விட்டார்.


இங்கு அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான முதல் கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. நவம்பர் ஆறாம் தேதி தேர்தல். இந்தியாவில் கொலைகாரர்களும் கொள்ளைக்காரர்களும் அரசியலில் நிற்கிறார்கள், இதை போல வேறெந்த நாட்டிலும் இல்லை என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தோம். இப்போது தேர்தலில் Presidential Primaries என்று கூறப்படும் முதல் கட்ட தேர்தல் நடப்புகளில் Keith Rusell Judd என்கிற கைதி அமெரிக்காவின் West Virginia மாகாணத்தில் ஒபாமாவின் ஓட்டில் 41% பெற்றுள்ளார். Keith Juddd ஜனாதிபதி வேட்பாளராக ஆகலாமா கூடாதா என்று ஏகப்பட்ட சர்ச்சை இங்கே.


எதாவது எழுத வேண்டுமே என்று ஒரு பதிவு போட்டாயிற்று. ஒரு தரமான பதிவுடன் வெகு விரைவில் சந்திக்கிறேன். நன்றி.