Wednesday, 2 December 2009

டிசம்பர் சங்கீத சீசன்

சென்னையில் டிசம்பர் சங்கீத சீசன் களை கட்ட துவங்கிவிட்டது. மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ், மியூசிக் அகாடமி போன்ற சபாக்கள் இன்னும் தங்கள் மார்கழி மாத நிகழ்ச்சிகளை வெளியிடவில்லை ஆனால் பெரும்பாலான சபாக்கள் நேற்றைய நாளிதழ்களில் தங்கள் அரங்கில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளை தேதிவாரியாக வெளியிட்டுள்ளன.

டி.எம்.கிருஷ்ணா, பாம்பே ஜெயஸ்ரீ, நித்யஸ்ரீ, சஞ்சய் சுப்ரமணியம், உன்னிகிருஷ்ணன் போன்ற பெரிய வித்வான்/விதுஷி ஆகியோரின் கச்சேரிகளை சென்னையில் உள்ள எல்லா சபாக்களிலும் கேட்கலாம். ஆகையால் நான் அதை பற்றி எதுவும் சொல்லப்போவதில்லை. நான் கீழே குறிப்பிட்டுள்ள கச்சேரிகள் கொஞ்சம் "ஸ்பெஷல்" ரகம். நேரம் கிடைத்தால் அவசியம் செல்லுங்கள்.

சபா: மீனாக்ஷி சுந்தரராஜன் பைன் ஆர்ட்ஸ் அகாடமி
நிகழ்ச்சி நடக்கும் அரங்கம்: கோடம்பாக்கம் மீனாக்ஷி கல்லூரி K.R.S. அரங்கம்
நிகழ்ச்சி: A.K.C.நடராஜன்-கிளாரினெட்
தேதி மற்றும் நேரம்: 18-12-2009 6:30p.m

சபா: மீனாக்ஷி சுந்தரராஜன் பைன் ஆர்ட்ஸ் அகாடமி
நிகழ்ச்சி நடக்கும் அரங்கம்: கோடம்பாக்கம் மீனாக்ஷி கல்லூரி K.R.S. அரங்கம்
நிகழ்ச்சி: காயத்ரி கிரீஷ் பாட்டு, ஹரித்வாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் தவில்
தேதி மற்றும் நேரம்: 21-12-2009 6:30p.m

சபா: பார்த்தசாரதி சுவாமி சபா
நிகழ்ச்சி நடக்கும் அரங்கம்: வித்யா பாரதி, பீமசேனா கார்டன் ரோடு, மயிலாப்பூர்
நிகழ்ச்சி: Carnatic-Hindustani Jugalbandhi, Dr.Sriram Parasuram & Anuradha Sriram
தேதி மற்றும் நேரம்: 23-12-2009 6:30p.m

சபா: ஸ்ரீ கிருஷ்ண கான சபா
நிகழ்ச்சி நடக்கும் அரங்கம்: கிருஷ்ண கான சபா அரங்கம், தி.நகர்
நிகழ்ச்சி: டி.எம்.கிருஷ்ண பாட்டு, டி.கே.முர்த்தி & பி.சிவராமன் (இரட்டை மிருதங்கம்)
தேதி மற்றும் நேரம்: 31-12-2009 4:30p.m

சபா: ஸ்ரீ கிருஷ்ண கான சபா
நிகழ்ச்சி நடக்கும் அரங்கம்: கிருஷ்ண கான சபா அரங்கம், தி.நகர்
நிகழ்ச்சி: விசாகா ஹரி, "ஸ்ரீனிவாச வைபவம்" Musical Discourse
தேதி மற்றும் நேரம்: 23-12-2009 9:30a.m

சபா: ஸ்ரீ கிருஷ்ண கான சபா
நிகழ்ச்சி நடக்கும் அரங்கம்: கிருஷ்ண கான சபா அரங்கம், தி.நகர்
நிகழ்ச்சி: திருப்பாம்பரம் சகோதரர்கள் நாதஸ்வரம், இரட்டை தவில்
தேதி மற்றும் நேரம்: 17-01-2010 6:30p.m

சபா: நுங்கம்பாக்கம் கல்சுரல் அகாடமி
நிகழ்ச்சி நடக்கும் அரங்கம்: ராமராவ் கலா மண்டப், தி.நகர்
நிகழ்ச்சி: Dr.M.Balamuralikrishna
தேதி மற்றும் நேரம்: 17-01-2010 6:30p.m

வளரும் கலைஞர்களில் கவனிக்கப்பட வேண்டியவர்கள்
நிஷா ராஜகோபால்
அபிஷேக் ரகுராம்
ரித்விக் ராஜா

இவ்வளவு எல்லாம் சொல்றியே இந்த கச்சேரிக்கெல்லாம் நீ போக போறியா அப்படின்னு கேக்கறீங்களா? நான் பனிரெண்டாம் தேதி துபாய் போயிட்டு ஜனவரி கடைசியில் தான் வரேன். அதனால இந்த சீசன் கச்சேரி எதுக்கும் போக முடியாது.

Saturday, 28 November 2009

எந்த வேளை?

இங்கே பெங்களூரில் வீடு பார்த்து ஒருவழியாக செட்டில் ஆகியாச்சு (ரொம்ப நாளா ஒரு சந்தேகம் ...செட்டில் ஆவது என்றால் என்ன?) , அதன் ஒரு பகுதியாக வீட்டு வேலை செய்ய ஒரு பெண்மணி தேவை, இங்கே உள்ள அபார்ட்மெண்டில் சொல்ல ஒரு பெண் வந்தார் , சுத்தமான கர்நாடக தமிழ்..பேரம் ஆரம்பித்தது மனைவி ஒவ்வொவொரு வேலையாக சொல்லிக்கொண்டே வர அவர் பொறுமையாக கேட்டு விட்டு சொன்னார் ஒரு வேளைக்கு 500 ரூபாய் , மனைவி யோசித்து பரவாயில்லை நீ ஒரு வேளை வந்தால் போதும் என்று சொன்னாள், பதில் கேள்வி "எந்த வேளை?" ..சற்று யோசித்து மனைவி சொன்னது "காலை" . சற்று நேரம் மௌனம் , "இல்லம்மா எந்த வேளை செய்யணும்?" இப்படி சில தத்துவ விசாரணைகள்  நடந்து முடிந்த பின் தெரியவந்த செய்தி,அந்த பெண் சொன்னது வேளை அல்ல வேலை, அதாவது வீடு பெருக்க 500 பாத்திரம் கழுவ 500 , துணி துவைக்க 500....

ok, bye, எனக்கு நிறைய வேளை sorry வேலை இருக்கு (துணி துவைக்கணும், பாத்திரம் கழுவனும் ...) , அடுத்த பதிவில் பார்ப்போம்.

Wednesday, 18 November 2009

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்


மயிலாப்பூர் சித்திரகுளம்

மரங்கள் சூழ்ந்த சென்னை சாலைகள்

ஹிண்டு நாளிதழில் ஒவ்வொரு புதன்கிழமையும் "Metro Plus" பகுதியில் வரும் "Memories of Madras" என்னும் பத்தியில் சென்னை தங்கள் இளமைக் காலத்தில் எப்படி இருந்தது என்று எழுத்தாளர் பாலகுமாரன், வி.கல்யாணம் போன்றவர்கள் தங்கள் மெட்ராஸ் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள்.

வீட்டை திறந்து வைத்து விட்டு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், திருட்டு பயமே கிடையாது என்று இவர்கள் சொல்வதை எல்லாம் இன்றைய சென்னையுடன் ஒப்பிடவே முடியவில்லை. கூட்டமில்லாத சாலைகள், மரங்கள் சூழ்ந்த தி. நகர் பகுதி, குப்பையில்லாத மெரினா கடற்கரை என்று நிறைய நம்ப முடியாத தகவல்கள். ஆனால், நம்பியே ஆக வேண்டும் என்கிற மாதிரி கூடவே அந்த கால சென்னையின் படங்களை வேறு பிரசுரித்து வெறுப்பேற்றுகிறார்கள்.நேரம் கிடைத்தால் அவசியம் படியுங்கள்.

Photos Courtesy: Hindu Archives

Monday, 16 November 2009

நான் முதல்வரானால் கட்டுரை...

சிறு வயதில் நான் முதல்வரானால் என்று கட்டுரை எழுத சொல்லுவார்கள்..அது போல இப்போது எழுதினால் எப்படி இருக்கும் என்று பார்க்கிறேன் , இப்படி வந்தது,

முதல் விசிட் தமிழகத்தில் உள்ள முக்கிய சிறைச்சாலைகள் - அங்கே பார்க்க வேண்டியது....

-70 வயதுக்கு மேல் இருப்பவர் எத்தனை பேர்? அதில் தண்டனை காலம் முடிந்தும் இருப்பவர் எத்தனை பேர்? அதில் கடுமையான உடல் உபாதையினால் அவதிப்படுபவர் எத்தனை பேர்? மூர்கமாக தாக்கப்பட்டு உடல் உறுப்பு சிதைந்தவர் எத்தனை பேர்? ஓரினப்புனர்சியில் வேறு வழியில்லாமல் ஈடுபட்டவர் எத்தனைபேர்?
    
- பெண்கள் சிறைகளில் கர்பப்பையை எடுக்க வேண்டிய நிலையில் இருப்பவர் எத்தனை பேர்? கர்பமாக இருப்பவர் எத்தனை பேர் அவருக்கான ஊட்டச்சத்து கிடைக்கிறதா என்ற கேள்விக்கான பதில்? மாதவிடாய் காலங்களில் அவர்களுக்கு வேண்டிய உபகரணங்கள் கிடைக்கிறதா? 

-சிறைகளில் உள்ள மன நலம் பாதிக்கப்பட்டவர் எப்படி நடத்தபடுகின்றனர்? மன நோயாளியுடன் எத்தனை பேர் ஒரே அறையில் தங்கி இருக்கின்றனர்?
 -சிறைகளில் உள்ள கழிவறைகளின் நிலை என்ன, எத்தனை நாட்களுக்கொருமுறை சுத்தம் செய்யபடுகின்றது?

அடுத்த விசிட் மனநோய் விடுதிகளுக்கு, அங்கேயும் முதல்வர் பார்க்க வேண்டியது..


-பெண்கள் மனநோய் விடுதிகளில் உள்ள பெண்களின் உடல்நிலை முக்கியமாக பெண்களுக்கு வரும் பிரத்யேக உடல் பிரச்சினைகள் எப்படி எதிர்கொள்கின்றனர்?
-மனநோய் விடுதியில் எத்தனை பேர் இருக்க முடியும்? எத்தனை பேர் இருக்கிறார்கள்?
-குழந்தைகளுக்கு தனி மனநோய் விடுதி இருக்கிறதா / தனிப்பிரிவு இருக்கிறதா?
-முக்கியமாக குணமடைந்தும் வெளியே போகமுடியாமல் இருக்கும் நோயாளிகள் எத்தனை பேர்?
-அரசாங்கத்திற்கு தெரியாமல் நடத்தப்படும் மனநோய் விடுதிகள் (ஏர்வாடி / குற்றாலம் போன்ற இடங்களில் நடக்கும்) மனநோய் விடுதிகளில் உள்ளே  போகும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கும் வெளியே வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கும் இருக்கும் வித்தியாசம்.
-மனநலம் சரியாக இருந்து , பிற காரணங்களால் (உ.தா பெண்ணை காதலித்தவனை பைத்தியம் என்று சொல்லி அரசியல் செல்வாக்கு உள்ள பெரும்புள்ளி ஒருவனை குற்றாலத்தில் உள்ள மனநோய் விடுதிக்கு அனுப்பிய செய்தியை படித்து இருக்கிறேன்) மனநோய் விடுதிகளில் மாட்டிக்கொண்டு அங்கே இருக்கும் சூழ்நிலை காரணமாக பைத்தியம் ஆகியவர் எத்தனை பேர்?

-மன நோயாளிகளாக மருத்துவமனைக்கு வந்து கர்ப்பம் ஆன  பெண்கள் எத்தனை பேர்? அவர்களுக்கு கருக்கலைப்பு எந்த மாதத்தில், யாரால் செய்யப்பட்டது?
-பொது மருத்துவமனையில் பெற்றெடுத்த குழந்தைகளில் பிறந்த சில மணி நேரங்களில் காணாமல் போய் , சில மாதங்களில் கை கால் இழந்த நிலையில் உள்ளவை எண்ணிக்கை ?
-அப்படி தொலைந்து போனதால் மனநலம் பாதிக்கப்பட்ட தாய்மார்களின் எண்ணிக்கை?

ஒருவேளை இப்படியெல்லாம் தோன்றுவதால்தான் வளர்ந்த பிறகு இப்படி கட்டுரை எழுத வாய்ப்பு வரவில்லையோ....?

Friday, 13 November 2009

மது கோடாவா அல்லது கோடியா??


இரண்டு ஆண்டு முதலமைச்சர் பதவி சாதனைகள்:

1. 2500 கோடி ரூபாய் சொத்துக் குவிப்பு
2. மும்பை யூனியன் பேங்க் வங்கிக் கணக்கில் 640 கோடி ரூபாய் பணமாக அவருடன் தொடர்புடைய ஒருவரால் செலுத்தப்பட்டது
3. தனது ஆதரவாளர்களுக்காக 600 பைக் மற்றும் 30 ஸ்கார்பியோ கார்கள்.இவற்றில் 200 பைக் ஒரே நாளில் வாங்கப்பட்டவை
4. தனக்கு நெருக்கமானவர்களுக்கு நிலக்கரி சுரங்கங்கள் தோண்ட அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம்
5. தாய்லாந்தில் ஒரு ஹோட்டல்
6. கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற நலிவடைந்த தொழிற்சாலைகளை வாங்கியதாக ஒரு குற்றச்சாட்டு

இன்னும் பட்டியல் முடியவில்லை. அமலாக்கப் பிரிவு தோண்ட தோண்ட பட்டியல் நீண்ட வண்ணம் இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் தான் பிரதமர் மன்மோகன் சிங் "Don't let the big fish escape" என்று மத்திய புலனாய்வு துறையினருக்கு கட்டளையிட்டார். இப்படி அப்படிப்பட்ட ஒரு மீன் தான். இந்த வழக்கு கூடிய விரைவில் மத்திய புலனாய்வு துறையினர் வசம் சென்று விடும். மீன் பிடிக்கப்படுமா அல்லது இதுவும் அவர்கள் புலனாய்வு செய்துகொண்டு இருக்கும் அல்லது செய்வது போல பாவ்லா காட்டும் "ஆருஷி தல்வார்" வழக்கு போல ஆகுமா என்று பார்ப்போம்.

Thursday, 12 November 2009

தமிழ் அகராதி

வலையில் ஏதோ தேடும் போது இது அகப்பட்டது. தமிழ் நாட்டம் உள்ளவர்களுக்கு உதவலாம்.